

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க வேண்டுமானால், அந்த வாக்காளர் தனது தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக இ.சி.ஐ.நெட் என்ற தேர்தல் கமிஷனின் செயலியை பயன்படுத்தலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத சூழ்நிலையில், எந்தவித அடையாள அட்டையை வாக்குச்சாவடிக்கு கொண்டு சென்றாலும் ஓட்டுப்போட அனுமதிக்கப்படமாட்டார். கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பெயர் இடம் பெறாத வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதற்கு 26-ந் தேதிதான் (இன்று) கடைசி தேதியாகும்.
இறுதி நாளான இன்று பெயர் சேர்க்க விண்ணப்பிக்காதவர்கள், இந்த தேர்தலில் ஓட்டுபோட முடியாது. எனவே விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க உடனடியாக விண்ணப்பிக்கலாம். இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அப்படிப்பட்டவர்களின் பெயர்கள், துணைப் பட்டியலில் வெளியிடப்படும். துணைப் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தால்தான் அவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளவர் ஆவார்.