

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17-ஆவது கூட்டத்தொடர் கடந்த மே 11-ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் த.வெ.க. அரசு பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரிய தீர்மானத்தின் போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இவரது கருத்துக்கு நாடு முழுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சனாதன தர்மம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "உதயநிதி ஸ்டாலினுக்கு 'சனாதன தர்மம்' என்றால் என்னவென்றே தெரியாது... இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என அனைவரையும் நாங்கள் எப்போதும் சமமாகவே நடத்துகிறோம்.
தனிப்பட்ட முறையில், எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை; இருப்பினும், ஒரு அமைச்சராக நான் அதற்கு மரியாதை அளிக்க கடமைப்பட்டுள்ளேன். நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல; நாங்கள் 'இந்துத்துவா'விற்கே எதிரானவர்கள். இந்துத்துவா என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தை மற்றவர்கள் மீது திணிப்பதாகும். நிச்சயமாக, நாம் அனைவரையும் சமமாகவே நடத்த வேண்டும்.
தமிழ்நாட்டின் அடிப்படை எப்போதுமே சமத்துவம்தான். வட இந்தியாவில், சனாதன தர்மம் என்பது 'இந்து மதம்' என்றே பொருள்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில், சனாதன தர்மம் என்பது 'சமத்துவமின்மை'யையே குறிக்கிறது. நிச்சயமாக, அவர் இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டும். நாங்கள் எப்போதும் சமத்துவமின்மைக்கு எதிரானவர்களே. நாங்கள் எந்தவொரு மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல," என்று தெரிவித்தார்.