TN Elections 2026: பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு அப்பட்டமான அடக்குமுறை... விஜய் ஆவேசம்

புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளை திட்டமிட்டு நசுக்கும் செயல்.
TN Elections 2026: பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு அப்பட்டமான அடக்குமுறை... விஜய் ஆவேசம்
Published on

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் பணிகளால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை நடைபெற இருந்த விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பெரம்பூர் பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரியிருந்த நிலையில், 3000 பேர் கூட முடியாது என்பதால் த.வெ.க. மனு நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், தனது பிரசாரத்தை ஆளும் தி.மு.க. அரசு திட்டமிட்டு முடக்குவதாக த.வெ.க. தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.

நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.

ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன??

இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும்.

தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி!," என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com