

மதுரை திருப்பரங்குன்றம் தி.மு.க. வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என த.வெ.க. வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கபட நாடகம் ஆடியும், ஆசை வார்த்தைகள் கூறியும், எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் நோக்குடன், வெற்று விளம்பர மாடல் தி.மு.க. முயன்று, தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்களுக்குத் தி.மு.க.வினர் பணம் கொடுக்க முயல்வதாகச் செய்திகள் வருகின்றன.
நேற்றைய தினம், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் அவர்களின் ஆதரவாளரிடம் இருந்து ரூ.50 லட்சம் பணத்தைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் கழகத் தோழர்கள் இணைந்து, தி.மு.க.வினரைப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால்,அவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் காவல் துறையினர் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகச் சந்தேகம் எழுகிறது. எனவே இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் உடனடியாக முழுமையான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .
மேலும் வாக்காளர்களுக்குப் பணம் வழங்க முயற்சி செய்த தி.மு.க. வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் களத்தில் தி.மு.க.வின் பித்தலாட்டங்கள் அனைத்தையும் தமிழ்நாடு மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் நிகழ்த்த உள்ள விசில் புரட்சியால் தி.மு.க. என்கிற கட்சி, வனவாசம் செல்லப் போவது உறுதி. வெற்றித் தலைவர் தலைமையில், உண்மையான மக்களாட்சி அமையப் போவதும் உறுதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.