தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விவகாரம் - Technical Error என்கிறார் துணை முதலமைச்சர்

'மைக்' சரியாக வேலை செய்யவில்லை. தேவையில்லாமல் மீண்டும் ஏதும் பிரச்சனையை கிளப்பி விடாதீர்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விவகாரம் - Technical Error என்கிறார் துணை முதலமைச்சர்
Published on

முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் இன்று நடந்தது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சான்றிதழ்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இதை பாடிய அரசு பெண் ஊழியர்கள் பாடலை பிழையுடன் தவறாக பாடினார்கள்.

நிகழ்ச்சி முடிந்ததும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளித்தபோது, தவறாகப் பாடப்படவில்லை. 'டெக்னிக்கல்' தவறு தான் 'மைக்' சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு மூன்று இடத்தில் அவங்க பாடும்போது குரல் கேட்கவில்லை.

அதனால் மறுபடியும் மீண்டும் முதலில் இருந்து தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாக பாடி இருக்கிறோம். அது முடிந்ததும் தேசிய கீதமும் ஒழுங்காக பாடப்பட்டது. தேவையில்லாமல் மீண்டும் ஏதும் பிரச்சனையை கிளப்பி விடாதீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நிகழ்ச்சி குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

திராவிட மாடல் அரசின் முன்னெடுப்பில் ஒன்றான 'தமிழ்நாடு சி.எம். பெலோஷிப் புரோக்ராம்' முதல் 'பேட்ஜ்' நிறைவு செய்த இளைஞர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி உள்ளோம்.

2022-ம் ஆண்டு முதல் பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக முதலமைச்சர் வருடந்தோறும் ரூ.6.5 கோடி நிதி ஒதுக்கி தந்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பேரில், 'கோர்சை' நிறைவு செய்த 19 பேருக்கு இன்று சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது இளைஞர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com