3வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து - திமுக கண்டனம்

விஜய் பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது பாடப்பட்டதற்கு பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
3வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து - திமுக கண்டனம்
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வரிசைப்படுத்தப்பட்ட விதம் தொடர்பாகச் சர்ச்சை எழுந்துள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். தவெக காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்) மற்றும் வி.சி.க ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் 118 இடங்கள் என்ற பெரும்பான்மை இலக்கை எட்டி ஆட்சி அமைத்துள்ளது.

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பதவியேற்புக்கு முன்பாக தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. அதாவது முதலில் மத்திய அரசின்படி உத்தரவின்படி வந்தே மாதரமும், இரண்டாவது தேசியக்கீதமும், மூன்றாவது தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்து தொடக்கத்திலும், தேசிய கீதம் நிகழ்வின் இறுதியிலும் பாடப்படுவது மரபாக உள்ளது. ஆனால், இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், அது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக திமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஐடி விங்கில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தமிழ்த் தாயை பின்னுக்குத் தள்ளியது தான் புதிய மாற்றமா?

தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்பட்ட பிறகு மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது.

தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகள் வழக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவடையும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com