

தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சரான சி.டிஆர். நிர்மல்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
"குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் தவெகவிற்கு இல்லை. இப்போது தேர்தல் நடந்தாலும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். எங்கள் முதல்வர் மீது மக்கள் 100 சதவீதம் நம்பிக்கை வைத்துள்ளனர்.
அதிமுக மீதும் கட்சி தலைமை மீதும் நம்பிக்கையில்லாத காரணத்தால் தான் அக்கட்சியை சேர்ந்த நபர்கள் அவர்களாகவே ராஜினாமா செய்துவிட்டு இங்கு வந்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் எடுத்த முடிவை நாங்கள் தடுக்க முடியாது. அவர்கள் கட்சியில் இருக்கும் குழப்பங்களை பார்த்து ராஜினாமா செய்துள்ளனர்.
தமிழகத்தில் மின் தடை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்கெல்லாம் மின்தடை இருக்கிறதோ, அதை சரி செய்வதற்கு ஏழு குழுக்கள் கொண்ட மொபைல் டீம் அமைக்கப்பட்டு பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு வருகிறது.
தேவையில்லாமல் மின் தடைகளை ஏற்படுத்த ஒரு சில நபர்கள் முயற்சித்து வருகின்றனர். அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க வலியுறுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார்.