

பெரம்பூர்:
கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் முனுசாமி. லாரி டிங்கரிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன் தனுஷ்குமார் (வயது23). தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்தது. இதில் அவர் பெரிய அளவில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து ரம்மி விளையாடுவதற்கு பணம் இல்லாததால் தனுஷ்குமார், தனது தந்தையிடம் ரூ.24 ஆயிரம் கேட்டார். ஆனால் அவர் ரூ.4 ஆயிரம் மட்டும் உள்ளது என்று கூறி ஆன்லைன் மூலம் பணம் பரிமாற்றம் செய்தார்.
இந்த நிலையில் வீட்டில் உள்ள அறைக்கு சென்ற தனுஷ்குமார் பின்னர் நீண்டநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. கதவும் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் ஆர்.கே.நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் மாணவர் தனுஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர் தனுஷ்குமார் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.