திருச்சி பால்பண்ணை அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி டிரைவர் உள்பட 2 பேர் பலி

விபத்தில் பஸ்சில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த 12 பயணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்சி பால்பண்ணை அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி டிரைவர் உள்பட 2 பேர் பலி
Published on

திருச்சி:

சென்னையிலிருந்து கம்பம் நோக்கி ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்ஸில் 34 பயணிகள் இருந்தனர். பஸ்சை கம்பம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் இன்று (செவ்வாய்க்கிழமை)அதிகாலை 5.40 மணியளவில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பால் பண்ணை அருகே உள்ள மேம்பாலத்தில் வந்த போது விபத்தில் சிக்கியது.

முன்னால் தர்மபுரியில் இருந்து புதுக்கோட்டைக்கு செங்கல் லோடு ஏற்றிச் சென்ற லாரி மீது ஆம்னி பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த சந்திரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் பஸ்சில் பயணம் செய்த திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (வயது 60) பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது பேரன் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பினர்.

இந்த விபத்தில் பஸ்சில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த 12 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடோடி சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் இறந்த சந்திரன் மற்றும் பழனியம்மாள் உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 12 பயணிகளை ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்த இடத்தில் உதவி போலீஸ் கமிஷனர் ஜெயசீலன் விசாரணை நடத்தினர். பின்னர் ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான ஆம்னி பஸ் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

அதிக பாரம் காரணமாக லாரி மெதுவாக சென்ற நிலையில் அதிவேகமாக வந்த பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

டிரைவர் தூங்கியதால் விபத்து நிகழ்ந்ததா? எனவும் விசாரணை நடந்து வருகிறது. விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com