கை, கால்கள் முறிந்த நிலையில் தேர்வெழுத வந்த பிளஸ்-2 மாணவி

உமாமகேஸ்வரி தேர்வு எழுதுவதற்காக பிரத்யேக இடவசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது.தமிழ் மொழிப்பாட தேர்வை உமாமகேஸ்வரி ஆர்வமுடன் எழுதினார்.
கை, கால்கள் முறிந்த நிலையில் தேர்வெழுத வந்த பிளஸ்-2 மாணவி
Published on

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஓ.ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், தொழிலாளி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் உமாமகேஸ்வரி (வயது 17). திருமங்கலம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாடியில் காய போட்டிருந்த துணியை எடுக்க உமாமகேஸ்வரி சென்றபோது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது 2 கால்கள், இடது கை, குறுக்கெலும்பு உடைந்தது. இதையடுத்து உமாமகேஸ்வரி கடந்த 2 மாதங்களாக கை, கால்களில் கட்டுபோடப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வை முன்னிட்டு சிகிச்சையில் இருக்கும்போதே தேர்வுக்கு தயாரானார். ஆசிரியைகள் மற்றும் தோழிகளிடம் பாடத்தில் உள்ள சந்தேகங்களை கேட்டு படித்து வந்தார். அரசு பொது தேர்வை எழுதும் ஆர்வத்தில் இருந்த உமா மகேஸ்வரிக்கு பள்ளி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்தது. அதன்படி இன்று தேர்வு தொடங்கிய நிலையில் உமாமகேஸ்வரி வீட்டில் இருந்து வேனில் தேர்வு மையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

உதவியாளர்கள் அவரை தேர்வு அறைக்கு தூக்கிக் கொண்டு சென்றனர். அங்கு உமாமகேஸ்வரி தேர்வு எழுதுவதற்காக பிரத்யேக இடவசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. தமிழ் மொழிப்பாட தேர்வை அவர் ஆர்வமுடன் எழுதினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் கர்ணன், சமூக ஆர்வலர்கள் காளீஸ்வரன், இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர்.

இதுகுறித்து மாணவி உமாமகேஸ்வரி கூறுகையில், "கீழே விழுந்ததில் கை, கால்களில் முறிவு ஏற்பட்ட நிலையிலும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுத கடந்த சில வாரங்களாக தயாராகினேன். தேர்வு எழுத எனது பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு வழங்கியது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம் படிப்பேன்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com