வருமானவரித்துறை நோட்டீசை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கு வாபஸ்- ஐகோர்ட்டு அனுமதி

நோட்டீசின் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், அவற்றை ரத்து செய்யக்கோரியும் பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்தது.
வருமானவரித்துறை நோட்டீசை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கு வாபஸ்- ஐகோர்ட்டு அனுமதி
Published on

சென்னை:

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

2015-16-ம் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017-18-ம் ஆண்டுக்கு 82 கோடியே 12 லட்சம் ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நோட்டீசின் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், அவற்றை ரத்து செய்யக்கோரியும் பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்தது.

வருமான வரித்துறையின் மதிப்பீட்டு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வருமான வரித்துறையின் நோட்டீசை எதிர்த்து வருமான வரித்துறையில் மேல்முறையீடு செய்துள்ளதால் மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல்குத்தூஸ், மனுவை திரும்ப பெற அனுமதித்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com