சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும்: அண்ணாமலை

இந்தியா கூட்டணி வலுவாக இல்லை என்பது உண்மை தான்.தவறு செய்கிறபோது அந்தந்த அரசு நடவடிக்கைகளை எடுக்கிறது.
சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும்: அண்ணாமலை
Published on

ஆலந்தூர்:

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையை உருவாக்கிய பெருமை தமிழர்களுக்கு இருக்கிறது. தமிழர்கள் இங்கிருந்து சென்று 200 ஆண்டுகள் ஆகிறது. அவர்களை கவுரவப்படுத்தும் விதமாக இலங்கை அரசு மலையகத் தமிழர்களுக்காக ஒரு விழாவினை நடத்துகிறது. இந்த விழாவில் நானும், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ள இருக்கிறோம்.

சங்கரய்யா ஒரு மிகப்பெரிய தலைவர். அவருடைய சித்தாந்தத்தில் உறுதியானவர். தமிழக மக்களின் நலனுக்காக போராடியவர். சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்பதே பா.ஜனதாவின் நிலைப்பாடு. இது தொடர்பாக அனுப்பப்பட்டு இருக்கிற கோப்புகளை பற்றி எங்களுக்கு தெரியாது. எங்களுடைய நிலைப்பாடு சங்கரய்யாவுக்கு நிச்சயமாக கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்.

சாதி என்ற நச்சு பரவுவதற்கு நாமே காரணமாக இருந்திருக்கிறோம். நெல்லையில் நடைபெற்ற அந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். மனிஷ் சிசோடியாவின் கைதைப் பொறுத்தவரை உரிய ஆவணங்களோடு தான் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சந்திரபாபு நாயுடுவை ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு கைது செய்தது.

தவறு செய்கிறபோது அந்தந்த அரசு நடவடிக்கைகளை எடுக்கிறது. ஆனால் பா.ஜ.க. மட்டும் தான் அப்படி நடவடிக்கை எடுக்கிறது என்று சொல்வது தவறு.

இந்தியா கூட்டணி வலுவாக இல்லை என்பது உண்மை தான். நேற்று நடிகர் விஜய் பேசியதைப் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. பழையவர்களே 30,40 வருடம் இருந்திருக்கிறார்கள். புதியவர்கள் வரவேண்டும் அவர்களுடைய கருத்தை நிலை நாட்ட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. எல்லோரையும் மக்கள் பார்க்கட்டும். அதில் யார் சிறந்தவர் என்று முடிவு செய்து கொள்ளட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com