அதிமுக பொதுச்செயலாளராக கூறிக் கொள்ள பழனிசாமிக்கு உரிமை இல்லை- தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி புகார்

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது.அனைத்து ஆவணங்களையும் கடிதத்துடன் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டு உள்ளோம்.
அதிமுக பொதுச்செயலாளராக கூறிக் கொள்ள பழனிசாமிக்கு உரிமை இல்லை- தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி புகார்
Published on

சென்னை:

டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் வா.புகழேந்தி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள கடிதத்தில், அ.தி.மு.க.வின் விதிகள் மற்றும் சட்ட திட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டது, கட்சி பொறுப்புகள் மாற்றம் செய்யப்பட்டது ஆகியவை பதிவு செய்யப்படுகிறது. இதுவேறு எந்த நீதிமன்ற உத்தரவுக்கும் உட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதில் பழனிசாமிதான் பொதுச்செயலாளர் என குறிப்பிடவில்லை. அதனால் பழனிசாமி தன்னை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என கூற உரிமை இல்லை. பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏற்க வேண்டாம்.

தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தான் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் 'ஏ' மற்றும் 'பி' படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் படைத்தவர்கள். இந்த சூழலில் பழனிசாமியும் அவரது தரப்பினரும், பொது மக்கள் மத்தியில் பழனிசாமிதான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் என தவறான தகவலை பரப்பி வருகின்றனர். இதை தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து புகழேந்தி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை. வழக்கு முடிந்த பின்னர்தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை முடிவுக்கு கொண்டு வர முடியும். அதுவரை இதை தகராறு உள்ள நிலையில்தான் பார்க்க முடியும். சிவில் வழக்கு மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்த பின்னர்தான் முடிவு எட்டப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

தேர்தல் ஆணையம் முடிவு எடுக்காத நிலையில் பொதுமக்களை ஏமாற்றவும், கழக நிர்வாகிகளை திசை திருப்பவும் தவறான அறிவிப்பை சொல்லி பழனிசாமி ஏமாற்றி வருகிறார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது.

அதற்குரிய அனைத்து ஆவணங்களையும் கடிதத்துடன் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டு உள்ளோம். ஈரோடு இடைத்தேர்தலை பொருத்தவரை தற்காலிகமாக ஈரோடு இடைத்தேர்தலுக்கு மட்டும் பொருந்தும் வகையில், சுப்ரீம் கோர்ட்டு எங்கள் ஒப்புதலுடன் வழங்கிய தீர்ப்பு அது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com