கடன் தகராறில் அண்ணனுக்கு பதிலாக தம்பியை கடத்திய கும்பல்- 4 பேர் கைது

கடத்தல் கும்பல் அறையில் 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. கடத்தல் தொடர்பாக அப்பாஸ், மதன்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடன் தகராறில் அண்ணனுக்கு பதிலாக தம்பியை கடத்திய கும்பல்- 4 பேர் கைது
Published on

ராயபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் பாசிபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கலீலர் ரஹ்மான். இவரது மகன்கள் நூருல்ஹக், ஷேக் மீரான். இவர்களில் ஷேக் மீரான் சைதாப்பேட்டையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் ஷேக் மீரான் மண்ணடி, அங்கப்பன் நாயக்கன் தெருவில் தனது நண்பர்களுடன் சென்றார். அப்போது மோட்டார் சைக்கள்களில் வந்த மர்ம கும்பல் ஷேக் மீரானை வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தி சென்று விட்டனர்.

பின்னர் ரூ.40 லட்சம் கேட்டு ஷேக்மீரானை தாக்கினர். மேலும் பணத்தை கொடுக்கும்படி அவரது அண்ணன் நூருல்ஹக் மற்றும் தந்தை கலீலர் மீரானுக்கு போன் செய்து கூறும்படி மிரட்டினர். இதுபற்றி ஷேக்மீரான் தனது தந்தையிடம் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கலீலர் ரஹ்மான் தனது மகன் கடத்தப்பட்டது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதுபற்றி எஸ்பிளனேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கடத்தல் கும்பல் மண்ணடி, முத்து மாரி செட்டித் தெருவில் உள்ள லாட்ஜில் ஷேக்மீரானை அடைத்து வைத்திருப்பது தெரிந்தது.

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று லாட்ஜில் கடத்தி வைக்கப்பட்டிருந்த ஷேக்மீரானை மீட்டனர். மேலும் அங்கிருந்த மண்ணடியைச் சேர்ந்த முகமது ராவுத்தர், முகமது ரிபாயிதீன், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்த விஜயன், லட்சுமணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் ரூ.40 லட்சம் கடன் தகராறில் இந்த கடத்தல் நடந்து இருப்பது தெரிந்தது. கடத்தப்பட்ட ஷேக் மீரானின் அண்ணன் நூருல் ஹக்கும், கடத்தல் கும்பலில் இருந்த ஒருவரும் அக்கடி வெளிநாடு சென்று வந்து உள்ளனர்.

இதில் ரூ.40 லட்சம் பணத்தை நூருல்ஹக் கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால் அவர் பணத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த தகராறில் நூருல் ஹக்குக்கு பதிலாக அவரது தம்பி ஷேக்மீரானை கடத்தி பணம் கேட்டு மிரட்டி இருப்பது தெரிய வந்தது.

கடத்தல் கும்பல் அறையில் 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த கடத்தல் தொடர்பாக அப்பாஸ், மதன்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கைதான 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com