

திமுக கூட்டணியில் இருந்து தாவிய காங்கிரஸ் வைத்திருக்கும் 5 இடங்களை சேர்த்து விஜய்யின் தவெகவிடம் 113 இடங்கள் உள்ளன. ஆட்சியமைக்க பெரும்பான்மையான 118 இடங்களுக்காக திமுக கூட்டணியில் மீதம் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகின்றனர்.
அவர்கள் பிடிகொடுக்காமல் பேசுவதால் இழுபறி நீடிக்கிறது. 118 எம்எல்ஏக்களின் பெயர்களை கொடுத்தால் தான் ஆட்சியமைக்க அழைப்பேன் என தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இன்று இரண்டாவது முறையாக விஜய் சென்று சந்தித்தபோதும் ஆளுநர் பெரும்பான்மையை கொண்டு வரவே வலியுறுத்தி வழியனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் ஆங்கில ஊடகத்திற்கு ஆளுநர் அர்லேகர் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டியில் அவர் கூறியதாவது, "மெஜாரிட்டி இல்லாதது விஜய்க்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்குமான பிரச்சினை. 118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது. மைனாரிட்டி அரசு ஆட்சி அமைத்து குதிரை பேரம் நடத்துவதை அனுமதிக்க முடியாது.
118 எம்.எல்.ஏ.க்களை கண்முன் நிறுத்துங்கள் என்று நான் கூறவில்லை, விஜய் பதவியேற்பை நான் தடுப்பதாக எப்படி சொல்ல முடியும்?. விஜய் மெஜாரிட்டி எண்ணுடன் வந்தால் ஆட்சி அமைக்க அழைக்க தயார். அடுத்த 3 நாட்களுக்கு இப்படியே நீடித்தால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுக, திமுக இணைந்து ஆட்சியமைக்க கோரவும் அரசியலமைப்புப்படி சாத்தியமே என்று கேள்வி ஒன்றுக்கு அவர் அவர் தெரிவித்துள்ளார்.