'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்திற்கு விருது.. ஆட்சியாளர்கள் சிந்தனை புரிந்து கொள்ள முடிகிறது- திருமாவளவன்

'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்திற்கு விருது.. ஆட்சியாளர்கள் சிந்தனை புரிந்து கொள்ள முடிகிறது- திருமாவளவன்

'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்காதது குறித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் முரண்பாடான படம் என்று திருமாவளவன் கூறினார்.
Published on

69-வது தேசிய விருது பெரும் படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில், 'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு விருது அறிவிக்காதது குறித்து பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆட்சியாளர்கள் கலைத்துறையை எப்படி கையாளப்பார்க்கிறார்கள் என்பது 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்திற்கு விருது வழங்கியதில் இருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது:- 'ஜெய்பீம்' திரைப்படம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய படம். அனைவரின் பாராட்டையும் பெற்ற படம் அந்த படத்திற்கு விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது, கிடைக்காததால் விமர்சனம் வருகிறது. 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் முரண்பாடான படம். ஆட்சியாளர்கள் என்ன சிந்தனையோட்டத்தில் இருக்கிறார்கள் கலைத்துறையை எப்படி கையாளப்பார்க்கிறார்கள் என்பது 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்திற்கு விருது வழங்கியதில் இருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

பொதுவாக ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களின் கருத்து சார்ந்த எழுத்திற்கோ, படைப்பிற்கோ விருது வழங்குவது வாடிக்கையான ஒன்று. இந்த அரசு திரைப்படத் துறையையும் தங்களுக்கான ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வெகுவாக விரும்புகிறது. அதில் அதிகமாக தலையீடு செய்கிறது. அவர்கள் விரும்புகிற வெறுப்பு அரசியலை விதைப்பதற்கு திரைத்துறையை பயன்படுத்திக் கொள்கிறது என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com