

மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
மத்திய அரபிக்கடல், தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நேற்று மாலை நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
கடலில் புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் தொடங்கி உள்ளது என்பதை குறிக்கும் வகையில் இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நாகை மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.