

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்று அளித்திருந்தார்.
அதில், பேராசிரியர் ஞானவேல் பாபு என்பவர் தனக்கு நீண்டநாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், செல்போனுக்கு தவறான அர்த்தங்கள் கொண்ட குறுஞ்செய்திகளை அனுப்பி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மாணவியின் இந்தப் புகாரைத் தொடர்ந்து பேராசிரியர் இன்று பல்கலைக்கழகத்தில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர்மீது துறைரீதியான விசாரணைக்கும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே கோட்டூர்புரம் போலீசார் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் பேராசிரியர் ஞானவேல்பாபுவை நெல்லையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரை நெல்லையில் இருந்து சென்னைக்கு அழைத்து வருகின்றனர். மாணவியின் புகாரின்பேரில் முதற்கட்ட விசாரணை முடிவடைந்தநிலையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.