என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஞ்ஞான ஊழல்... ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.500 கோடி சுருட்டல் - #Anbumani அறிக்கை
    X

    விஞ்ஞான ஊழல்... ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.500 கோடி சுருட்டல் - #Anbumani அறிக்கை

    • வேளாண்துறையின் ஓர் அங்கமான வேளாண் விற்பனைத்துறையில் 27 மாவட்ட விற்பனைக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
    • தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய கிடங்குகளை கட்டியிருக்க முடியும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வணிகர்களிடமிருந்து சந்தைக்கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகையில் கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.500 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க கிடங்குகள் இல்லாமல் உழவர்கள் அவதிப்படும் நிலையில், அவர்களின் பணத்தை ஆட்சியாளர்கள் கொள்ளையடிப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாடு அரசின் வேளாண்துறையின் ஓர் அங்கமான வேளாண் விற்பனைத்துறையில் 27 மாவட்ட விற்பனைக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் கட்டுப்பாட்டில் 284 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களும், 13 துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் செயல்பட்டு வருகின்றன. உழவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து, அதன் மூலம் உழவர்களுக்கு அதிக விலை பெற்றுத் தருவது தான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் பணியாகும். இதற்காக உழவர்களிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், விளைபொருள்களை கொள்முதல் செய்யும் வணிகர்களிடம் இருந்து அவர்கள் வாங்கும் பொருள்களின் மொத்த மதிப்பில் 1% சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    இவ்வாறு வசூலிக்கப்பட்ட தொகையில் தான் பெருமளவில் ஊழல்கள் நடைபெற்றிருப்பதுடன், உழவர்களுக்கு இரு வகைகளில் துரோகமும் இழைக்கப்படுகிறது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அனைத்து விளைபொருள்களும் மறைமுக ஏலத்தில் தான் விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், ஏட்டில் இந்த முறை தான் உள்ளது என்றாலும், நடைமுறையில் இது பின்பற்றப்படுவதில்லை. மாறாக, வணிகர்களுடன் ஊழல் கூட்டணி அமைத்துக் கொண்டு உழவர்களுக்கு குறைவான கொள்முதல் விலையைத் தான் பெற்றுத் தருகின்றனர். இது உணவு படைக்கும் கடவுள்களான உழவர்களுக்கு இழைக்கப்படும் முதல் துரோகமாகும்.

    அடுத்த துரோகம் தான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வணிகர்களிடமிருந்து வசூலிக்கப்படும் சந்தைக் கட்டணத்தில் பெருமளவு ஊழல் செய்யப்படுவதாகும். இதனால் உழவர்கள் மறைமுகமாக பாதிக்கப்படுகின்றனர். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வசூலிக்கப்படும் சந்தைக் கட்டணம் திமுக ஆட்சியாளர்களால் விஞ்ஞான முறையில் சுரண்டப்படுகிறது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை அவற்றின் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்காக பயன்படுத்திக் கொள்ள விதிகள் அனுமதிக்கின்றன. மேலும் 06.06.2018-ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 144-இன்படி ரூ.5 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான தொகையை விற்பனைக் குழுக்களே செலவழித்துக் கொள்ளலாம். இதற்காக யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. இது தான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஊழல் நடப்பதற்கான ஊற்றுக்கண்ணாக திகழ்கிறது.

    இந்த அரசாணையை பயன்படுத்திக் கொள்ளும் வேளாண்மை சந்தைத் துறையினர், ஒவ்வொரு விற்பனைக் குழுவிலும் உள்ள தொகையை ரூ.5 லட்சம், ரூ.5 லட்சமாக பிரித்து அதை பல்வேறு பணிகளுக்கு செலவு செய்ததாக சுருட்டிக் கொள்கின்றனர். இது வேளாண்துறை அமைச்சர் ஆசியுடன் தான் நடப்பதாகவும், இவ்வாறு ஊழல் செய்யப்படும் தொகையில் 50% அமைச்சருக்கு வழங்கப்படுவதாகவும், மீதமுள்ள தொகை பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளால் பகிர்ந்து கொள்ளப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

    தமிழ்நாட்டில் அதிக சந்தைக் கட்டணம் ஈட்டக் கூடிய விற்பனைக் குழுக்களில் முதன்மையானது கோவை மாவட்ட சந்தைக் குழு ஆகும். கோவை மாவட்டத்தில் மட்டும் 10 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளன. இவற்றிலிருந்து சந்தைக் கட்டணமாக வசூலிக்கபடும் தொகை மட்டுமின்றி, சந்தைக் குழுவுக்கு சொந்தமான கட்டிடங்களில் இருந்து வாடகையாக மாதம் ரூ.2,04,326 வீதம் ஆண்டுக்கு ரூ.24 லட்சத்து 51,912 கிடைக்கிறது. மேலும் சந்தைக் கட்டணங்களையும் சேர்த்தால் கோவை மாவட்ட விற்பனைக்குழுவுக்கு 2021-2025 வரையிலான 4 ஆண்டுகளில் ரூ.80 கோடிக்கும் கூடுதலாக வருவாய்க் கிடைத்துள்ளது. இதில் ரூ.76.475 கோடி செலவழிக்கப்பட்டிருப்பது தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநிலச் செயலாளர் இல. வேலுச்சாமி அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    இந்தத் தொகையில் வேளாண் சந்தைத் துறை திட்டங்களுக்காக வழங்கப்பட்ட குறிப்பிட்ட தொகை தவிர மீதமுள்ள தொகை முழுவதும் ரூ.5 லட்சத்திற்கும் குறைவான மதிப்புள்ள பணிகளுக்கு செலவிடப்பட்டதாகக் கூறி சுருட்டப்பட்டிருக்கிறது. மதில் சுவர் கட்டுதல், சிமெண்ட் தளம் அமைத்தல், சுற்றுச்சுவர் கட்டுதல், வண்ணம் பூசுதல், மின்சாரம் தொடர்பான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்காகவே இந்தத் தொகை செலவிடப்பட்டதும் தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

    இந்த செலவுகளுக்கு தணிக்கை கிடையாது, போட்டி ஏல முறை கிடையாது என்பதால் அதிக மதிப்பு கொண்ட பணிகள் கூட, ஊழல் செய்வதற்கு வசதியாக சிறு, சிறு பணிகளாக பிரித்து மேற்கொள்ளப்பட்டு, அதில் பெருந்தொகை சுருட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எடுத்துக்காட்டாக கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 150 மீட்டர் நீள சேதமடைந்த சுற்றுச்சுவர் ரூ.49.85 லட்சத்தில் கட்டப் பட்டதாக கணக்குக் காட்டப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டால் அதற்கு திட்ட மதிப்பீடு தயாரித்தல், போட்டி ஏல முறையில் ஒப்பந்தப்புள்ளி பெறுதல் உள்ளிட்ட பல நடைமுறைகள் பின்பற்ற பட வேண்டும்; இவை அனைத்திற்கும் மேலாக பணிகள் முடிந்த பிறகு தணிக்கை செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறை பின்பற்றப்படும்போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஊழல் செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

    அதனால், 150 மீட்டர் நீளமுள்ள சுற்றுச்சுவர் தலா 15 மீட்டர் வீதம் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. பின்னர் அந்த 10 பிரிவுகளும் தலா 50% வீதம் 20 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவுக்கும் அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் வீதம் மொத்தமாக ரூ.49.85 லட்சம் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் 2022-23ஆம் ஆண்டில் இந்தப் பணிகள் நடைபெற்றதாக கணக்கு காட்டப்பட்டுள்ள போதிலும், அந்த காலத்தில் சில மேற்பூச்சு பணிகளைத் தவிர வேறு எந்தப் பணியும் நடைபெறவில்லை என்று உழவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளும் இவ்வாறு தான் செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல் குறிச்சி உழவர் சந்தையில் கடைகளுக்கு மின்விளக்கு அமைத்தல், சுற்றுச்சுவர் கட்டுதல், பேவர்பிளாக் நடைபாதை அமைத்தல் ஆகிய பணிகள் மொத்தம் 16 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பணியும் சராசரியாக ரூ.5 லட்சம் மதிப்பில் ரூ.76.52 லட்சத்துக்கு மேற்கொள்ளப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் இதில் 10% தொகை கூட செலவழிக்கப்படவில்லை என உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

    இவற்றை அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற ஊழலாகக் கருதி ஒதுக்கி விட முடியாது. துறை அமைச்சர் அலுவலக ஆணைப்படி தான் அனைத்தும் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு உடன்படாத அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டதும் நடந்துள்ளது. 2023-24ஆம் ஆண்டில் சேலம், எடப்பாடி ஆகிய நகரங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வண்ணம் பூசும் பணியை 15 பிரிவுகளாக பிரித்து ரூ.75 லட்சத்தில் மேற்கொள்வதற்கு அத்துறையின் துணை இயக்குனர் நிலையில் உள்ள அதிகாரி ஒப்புக்கொள்ளாததால் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் உழவர் அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே போன்று ஊழல்கள் நடைபெற்றிருப்பதை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றப்பட்ட தரவுகள்வாரியாக அறிந்து கொள்ள முடிகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் ரூ.75 கோடி அளவுக்கும், தமிழ்நாடு முழுவதும் ரூ.500 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றன. 4 ஆண்டுகளில் ரூ.500 கோடி ஊழல் என்பது பெருந்தொகையாகும். இதைக் கொண்டு தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய கிடங்குகளை கட்டியிருக்க முடியும். அவ்வாறு கட்டியிருந்தால் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியிருந்திருக்காது.

    வேளாண்மை விற்பனைக் கூடங்களில் சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை சும்மா கிடைக்கவில்லை. உழவர்கள் வியர்வை சிந்தி விளைவித்த பொருள்களை வாங்கி விற்பதில் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியைத் தான் வணிகர்கள் சந்தைக் கட்டணமாக செலுத்துகின்றனர். அதைக் கொண்டு உழவர்களுக்கு நன்மை செய்யாமல் ஆட்சியாளர்களே சுருட்டிக் கொள்வதை மன்னிக்கவே முடியாது. இது தொடர்பான அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ளும் உரிமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. எனவே, 27 சந்தைக் குழுக்களிலும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×