

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாக மக்கள் வெளியே செல்வதை குறைத்துக் கொண்டனர். குறிப்பாக மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை சாலைகள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன.
இதனிடையே, தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விருதுநகர், தேனி, மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதற்கேற்றார் போல் ஆங்காங்கே திடீரென கருமேகங்கள் சூழ்வதும், அவ்வப்போது தூறல்கள் போடுவதுமாக இருந்து வந்தது.
நேற்று மாலை முதலே தென் மாவட்டங்களில் குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும் விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதியில் கனமழையும், சென்னையில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.