

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வரும் சூழலில் இன்று பெரம்பூரில் விஜய்யின் பிரசாரம் தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைக்காததால் ரத்தானது. பெரம்பூர் பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரியிருந்த பகுதியில், 3000 பேர் கூட முடியாது என்பதால் த.வெ.க. மனு நிராகரிக்கப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேரடியாக சென்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் புகார் மனு அளித்தார்.
அதில் திமுக ஆதரவு அதிகாரிகள் தனது பிரச்சாரத்தை தடுப்பதாக அவர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரசாரத்திற்கு உரிய அனுமதி வழங்கக்கோரியும் விஜய் மனு அளித்தார்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் மாற்று பகுதியிலும், வில்லிவாக்கம் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை மறுநாள்(மார்ச் 30) சென்னை பெரம்பூரில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு தனது தேர்தல் பிரசாரத்தை அவர் தொடங்குகிறார்.
தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் அதையடுத்து வில்லிவாக்கத்தில் விஜய் மேற்கொள்ள உள்ளார்.
இதற்கிடையே நாளை தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.