

மே 3 அன்று நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்தது பின்னர் தெரிய வந்ததால் இத்தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. மறுதேர்வு ஜூன் 21 நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாணவர்கள் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் பரவலாக போராட்டங்களை நடத்தின. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன.
இதனிடையே மறுதேர்வு குறித்த அச்சம் மாணவர்கள் பலரிடையே தொற்றியது. இதனால் மன அழுத்தத்தை தாங்க முடியாத சில மாணவர்கள் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்துகொண்டனர்.
தமிழகத்தில் ஏற்கனவே கோவையில் அனுகீர்த்தனா, சேலத்தில் கோபிகா ஆகிய மாணவிகள் தற்கொலை செய்த நிலையில் நாளை (ஜூன் 21) நீட் மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்த தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த ரோஷினி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனால் தமிழக்த்தில் நீட் அச்சத்தால் தற்கொலை செய்த மாணவிகள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை நீட் மறுதேர்வு பயத்தால் தற்கொலை செய்த மாணவிகள் எண்ணிக்கை 13 என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இதனிடையே கடும் அழுத்தத்தில் இருக்கும் மாணவ மாணவிகள் தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட மனநல ஆலோசனை பெற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 14416 அல்லது 104 எண்ணை அழைக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.