

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சிவப்பிரகாசம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அழகேசன். பித்தளை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி (வயது 40). இந்த தம்பதிக்கு பொன்னமராவதி அருகே புதுப்பட்டி அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் சங்கரி (13) உள்பட இரண்டு மகள்கள் இருந்தனர். குடும்ப வறுமை காரணமாக அவர்கள் அனைவரும் குடிசை வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை மீனாட்சி மற்றும் அவரது இளைய மகள் மகள் சங்கரி (13) ஆகியோர் வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் கூரையில் தீப்பற்றியது. வெயிலின் தாக்கம் காரணமாகவும், அந்த பகுதியில் காற்று சற்று பலமாக வீசியதாலும் கூரையின் பற்றிய தீயானது அடுத்த ஒருசில விநாடிகளில் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
இதைப்பார்த்த அக்கம் கக்கத்தினர் அவர்களை மீட்க போராடினர். ஆனால் அருகில் கூட நெருங்கமுடியாத அளவுக்கு தீ எரிந்தது. பின்னர் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பொன்னமராவதி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருந்தபோதிலும் தீ விபத்தில் மீனாட்சி மற்றும் சங்கரி ஆகியோர் 70 சதவீதம் எரிந்து படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். பின்னர் அவர்கள் இருவரும் பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பொன்னமராவதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் தீக்காயம் அடைந்த இருவரும் இன்று அதிகாலை அடுத்தடுத்து பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் பத்மா விசாரணை நடத்தி வருகிறார். தீ விபத்தில் தாய், மகள் உடல் கருகி பலியான சம்பவம் பொன்னமராவதி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.