எம்எல்ஏக்கள் ராஜினாமா: அரசியல் பின்னணியை ஆராய வேண்டிய கடமை சபாநாயகருக்கு இல்லை-பேரவைச் செயலாளர் திட்டவட்டம்!

எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதனால், அவர்கள் அதற்கு முன்னர் செய்த தவறுக்கான தகுதி நீக்க நடவடிக்கைகள் காலாவதியாகிவிடாது.
MLAs Resignations-Speaker under no obligation
Published on

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதற்கான பின்னணி காரணங்கள் அல்லது நோக்கங்கள் குறித்து ஆராய வேண்டிய அவசியம் பேரவைத் தலைவருக்கு இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளர் ஆர்.சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த மே மாதம் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, அதிமுகவின் கொறடா உத்தரவை மீறி அக்கட்சியைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேரவைத் தலைவரிடம் மனு அளித்திருந்தார்.

இந்த தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த சூழலில், மரகதம் குமரவேல், எஸ்.ஜெயக்குமார், பி.சத்யபாமா உள்ளிட்ட நான்கு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாக ஆளுங்கட்சியான தவெக-வில் இணைந்தனர். அவர்களின் ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

பேரவைத் தலைவரின் இந்த அதிரடி முடிவை எதிர்த்தும், தகுதி நீக்க நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவே இந்த ராஜினாமாக்கள் நாடகமாடப்பட்டதாகக் கூறியும் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா கடிதம் அளித்த சில மணி நேரங்களிலேயே எந்தவொரு முறையான விசாரணையும் நடத்தாமல் பேரவைத் தலைவர் அதனை அவசரகதியாக ஏற்றுக்கொண்டதாகவும், அவர் தவெக கட்சிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்குகளுக்குப் பதிலளிக்கும் விதமாக சட்டப்பேரவைச் செயலாளர் ஆர்.சாந்தி தாக்கல் செய்த 9 பக்கங்கள் கொண்ட பதில் மனுவில், பேரவைத் தலைவர் தவெக கட்சிக்கு விசுவாசமாகச் செயல்படுகிறார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை, அவதூறானவை மற்றும் கண்டிக்கத்தக்கவை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் அளிக்கும் ராஜினாமா கடிதமானது, எந்தவொரு கட்டாயமும் இன்றி தன்னிச்சையாகவும், உண்மையாகவும் அளிக்கப்பட்டிருக்கிறதா என்பதை மட்டுமே பேரவைத் தலைவர் சரிபார்க்க வேண்டும் என்றும், அதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் நோக்கங்களை ஆராய வேண்டிய கடமை அவருக்கு இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ள பேரவைச் செயலாளர், ஒரு உறுப்பினரின் ராஜினாமாவை ஏற்பது என்பது வேறு, அவர் மீதான தகுதி நீக்க நடவடிக்கை என்பது வேறு என்றும், இவை இரண்டும் தனித்தனி தளங்களில் செயல்படுபவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதனால், அவர்கள் அதற்கு முன்னர் செய்த தவறுக்கான தகுதி நீக்க நடவடிக்கைகள் காலாவதியாகிவிடாது என்றும், அந்த விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் விளக்கியுள்ளார். பேரவைத் தலைவர் தனது தன்னிச்சையான அதிகார வரம்பிற்குட்பட்டு எடுக்கும் முடிவுகளில், இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாக நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும் அந்த பதில் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வாதங்களைப் பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு, வழக்கின் இறுதி விசாரணையை வரும் ஜூலை 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இதற்கிடையே, அதிமுகவிலிருந்து விலகும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த நீதிமன்றத் தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com