வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு

தெற்கு உள்கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு
Published on

தமிழ்நாட்டில் கோடை காலம் வாட்டி வதைத்து வந்த சூழலில், தற்போது மழைக்கான சூழல் உருவாகி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வெப்பம் குறைந்து சீதோஷ்ண நிலை தமிழ்நாட்டில் சற்று மாறியுள்ளது.

இந்த நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய இலங்கை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தெற்கு உள்கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது. இவை காரணமாக தமிழ்நாட்டில் 16-ந்தேதி (சனிக்கிழமை) வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், ராமநாதபுரம், திருநெல்வேலி கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் காற்று, இடி, மின்னலுடன் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com