

சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் மட்டுமே வென்ற தவெக பெரும்பான்மை இல்லாமல் தவித்தது. அப்போது திமுக கூட்டணியில் 5 இடம் வென்ற காங்கிரஸ் தவெகவுக்கு தாவியது.
மேலும் திமுக கூட்டணியில் தலா 2 இடங்கள் வென்ற விசிக, சிபிஐ, சிபிஐ(எம்), ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவையும் தவெக கோரி வந்தது.
இழுபறிக்கு பின் இக்கட்சிகள் விஜய் ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தது.
விஜய் 3 முறை ஆளுனரை சந்தித்து மெஜாரிட்டி இல்லாமல் திரும்பிய நிலையில் நான்காவது முறையாக இன்று ஆதரவு கட்சி தலைவர்களுடன் சந்தித்து ஆட்சி அமைக்க ஆளுநரின் ஒப்புதலை பெற்றார்.
ஆதரவு கட்சிகளுடன் சேர்த்து 120 இடங்கள் இருந்ததால் ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்தார்.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. விஜய் முதல்வர் பதவி ஏற்க, அவருடன் 9 பேர் அமைச்சராக பதவி ஏற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விஜய் பதவியேற்பை பார்க்க பலர் கூடுவர் என்பதால் கூட்டத்தை தவிர்க்க சென்னையில் 20 இடங்களில் எல்.இ.டி. மின்னணுத் தொலைக்காட்சிகள் வாயிலாக விஜய் பதவியேற்பு விழாவை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
அண்ணாநகர் டவர் பார்க், மெரினா கடற்கரை, கோயம்பேடு சி.எம்.பி.டி, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம், தி.நகர் பேருந்து நிலையம், பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் பேருந்து நிலையம், கத்திபாரா நகர சதுக்கம், செம்மொழிப் பூங்கா, தீவு மைதானம் பேருந்து நிறுத்தம், நாகேஸ்வர ராவ் பூங்கா, மயிலாப்பூர் டேங்க் ஏரியா, வடபழனி பேருந்து நிலையம், எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதி, சோழிங்கநல்லூர் சந்திப்பு, மாதவரம் பேருந்து நிலையம், போரூர் சந்திப்பு, அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம், தொண்டியார்பேட்டை பஸ் டிப்போ பகுதி, அடையாறு டிப்போ சந்திப்பு ஆகிய இடங்களில் உள்ளிட்ட இடங்களில் இதற்கான எல்இடி திரைகள் நிறுவப்படும் என்று கூறப்படுகிறது.