என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும் கூட்டணியில் புதிய தமிழகம் - கிருஷ்ணசாமி
- தமிழ்நாடு போதை மாநிலமாக மாறியுள்ளது.
- தி.மு.க. ஆட்சி மீது மக்கள் மிகுந்த வெறுப்பில் உள்ளனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் தெற்கு மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நிலக்கோட்டையில் நடந்தது. கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடந்தது. இளைஞரணி தலைவர் சியாம் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்துக்கு பின் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாடு போதை மாநிலமாக மாறியுள்ளது. வரும் காலங்களில் மதுபானக்கடைகளை முழுமையாக மூடுவதற்கு புதிய தமிழகம் கட்சி போராடும். தி.மு.க. அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகமாக உள்ளது. முக்கிய துறைகளை கையாளும் 4 அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.
சமூக நீதி பேசும் அமைச்சர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு மட்டுமே சேவை செய்கின்றனர். வருகிற தேர்தலில் தி.மு.க. ஆட்சியை அகற்றும் கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம் பெறும். வருகிற தேர்தலில் கூட்டணி ஆட்சியே அமையும் அதில் புதிய தமிழகம் இடம்பெறும்.
எங்கள் கட்சி வருகிற தேர்தலில் தனித்தொகுதி மட்டும் பொதுத் தொகுதிகளில் அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.
தி.மு.க. ஆட்சி மீது மக்கள் மிகுந்த வெறுப்பில் உள்ளனர். மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குடும்ப ஆட்சியும், குடும்ப வாரிசுகளும் செழித்து வளர்ந்து வருகின்றனர். இதற்கு வருகிற தேர்தலில் முடிவு கட்டப்படும்.
நிலக்கோட்டை தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் போட்டியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.






