என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    27,000 பேர் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்க முடியுமென்றால்... - கவிஞர் வைரமுத்து ஆதங்கம்
    X

    27,000 பேர் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்க முடியுமென்றால்... - கவிஞர் வைரமுத்து ஆதங்கம்

    • கரூர் துயரத்தின் இறுக்கத்திலிருந்து தமிழர்கள் மெல்லமெல்ல விடுபட வேண்டும்
    • இனி இந்த நெடுந்துயரம் நிகழாது என்னும் விதிசெய்ய வேண்டும்

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றனர். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    கரூர்த் துயரத்தின் இறுக்கத்திலிருந்து தமிழர்கள் மெல்லமெல்ல விடுபட வேண்டும். ஊடகங்களும் சமூக உரையாடல்களும் அந்த மனத்தடையிலிருந்து வெளியேற வேண்டும். அரசியல் கூட்டங்களிலோ ஆன்மிகக் கூட்டங்களிலோ இனி இந்த நெடுந்துயரம் நிகழாது என்னும் விதிசெய்ய வேண்டும்.

    41 சாவுகள் கன்னத்தில் அறைந்துசொன்ன பாடம் இதுதான். இந்தக் கருப்புத் துயரத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய யாரும் ஒரு தனி அறையில் தம் மனச்சான்றோடு உரையாடித் தாமே தம்மிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

    ஒரு செய்தி என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது. 8 மணி நேரத்திற்கு மேல் ஒரு வேலையும் இன்றி 27ஆயிரம் பேர் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்க முடியுமென்றால் அவர்களின் வாழ்வியல் என்ன? அவர்களால் இழக்கப்படும் மனிதவளம் என்ன? கல்வி நிறைந்த சமூகம் என்கிறோமே இவர்களுக்குக் கல்வி என்ன செய்தது? வெறும் எழுத்தறிவா கல்வி?

    காலத்தின் அருமையை வாழ்வின் பெருமையைக் கற்றுத் தருவதல்லவா கல்வி அந்த 27 ஆயிரம் பேர் இன்னும் கலைந்துவிடவில்லை. நாடெங்கும் அந்த மக்களைக் கணக்கெடுக்க வேண்டும். தொழில் கொடுத்து அவர்களுக்கு நேரமில்லாமல் செய்ய வேண்டும். நாளாகலாம்... ஆனால், அதை நோக்கிச் சமூகம் நடந்தே தீர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×