என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் துயரம் - புஸ்ஸி ஆனந்த், C.T. நிர்மல் குமாரை கைது செய்ய 3 தனிப்படைகள்
- ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
- புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமின் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமின் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் நேற்று மனு தாக்கல் செய்தனர். மேலும் கரூர் துயர சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி த.வெ.க.வின் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில், த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.






