

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 'மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்' என்ற தலைப்பில் இளம் தலைமுறையினர் பங்கேற்ற அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி நேற்று (மே.30) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ ஆகியோர் தலைமை தாங்கினர்.
இக்கூட்டத்தில் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது:-
“இன்று மட்டுமல்ல 1991-ம் ஆண்டு தேர்தலிலும் பொய் செய்திகள், பொய் பிரசாரத்தால் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர் 1996-ம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தி.மு.க. பெற்றது. எனவே தோல்வியை கண்டு துவண்டு போகாத இயக்கம் தி.மு.க.
இந்த தேர்தலில் மக்கள் இப்படி செய்துவிட்டார்களே? என்று அவர்கள் மீது வெறுப்பை கக்காமல், அவர்களுக்கு இன்னும் நிறைய சொல்ல வேண்டி உள்ளது என்ற மனப்பான்மையோடு செயலாற்றிட வேண்டும்.
தி.மு.க.காரன் என்றால் எப்போதும் ஒரு திமிரு இருக்கணும். தி.மு.க.காரனால்தான் தமிழ்நாட்டுக்கு வளர்ச்சியை கொடுக்க முடியும். தற்போது நீங்களெல்லாம் (இளம் தலைமுறை) தன்னெழுச்சியாக உதயமானால்தான் 'உதயசூரியன்' வெளிச்சத்தில் தமிழ்நாடு தொடர்ந்து மின்னும்.
மீண்டும் வருவோம். தமிழ்நாட்டை மீட்டெடுப்போம். அது வெகு தொலைவில் இல்லை.”
இவ்வாறு அவர் பேசினார்.