என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒரு வயது குழந்தையை கொன்று இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம்... கணவர் கைது
- வீட்டில் உள்ள தொட்டியில் மகன் ஆதிரன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்றது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு, காந்திநகரை சேர்ந்தவர் கவின் பிரசாத். இவரது மனைவி அமராவதி (28). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 1 வயதில் ஆதிரன் என்ற மகன் இருந்தார். கவின் பிரசாத் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு வழக்கம் போல் வேலை முடிந்து கவின் பிரசாத் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் மனைவி, குழந்தையுடன் சாப்பிட்டு தூங்கு சென்று விட்டனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் பிரசாத் எழுந்து பார்த்தபோது மனைவி அருகில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் படுக்கை அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது மனைவி தூக்குப்போட்டு கொண்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அமராவதியை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே வரும் வழியிலேயே அமராவதி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனைக் கேட்டு கவின் பிரசாத் கதறி அழுதார். பின்னர் மகன் ஞாபகம் வந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள தொட்டியில் மகன் ஆதிரன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து வெள்ளோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குழந்தை ஆதிரனை கொன்று தாய் அமராவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்ப தகராறில் அமராவதி மகனை கொன்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதனிடையே, திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்றது.
இந்த நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அமராவதி கணவரே மனைவியையும், குழந்தையையும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவர் கவின் பிரசாத்திடம் நடத்திய விசாரணையில் மனைவி அமராவதியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் இருவரையும் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதை அடுத்து குழந்தையையும், மனைவியையும் கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் கவின் பிரசாத்தை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






