என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவண்ணாமலை அருகே அரசு பேருந்து - கார் மோதி விபத்து: 3 பேர் பலி
- கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் எதிரே வந்த அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- சிகிச்சை பலனின்றி கலைவாணனும், பவுனு அம்மாளும் பரிதாபமாக இறந்தனர்.
திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்தவர் சக்திவேல். இவரது தாயார் பவுனு அம்மாளுக்கு (வயது 70) உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர்.
அதன்படி பவுனுஅம்மாளை காரில் விழுப்புரத்துக்கு அழைத்துச்சென்று கொண்டிருந்தனர். காரில் சக்திவேலின் மனைவி கனகவல்லி (வயது 36). சக்திவேலின் தம்பி கோவிந்தராஜ் (42), அவரது மாமனார் கலைவாணன் (60, ஆகியோர் சென்றனர்.
திருவண்ணாமலையை அடுத்த ராஜந்தாங்கல் பகுதியில் விழுப்புரம் நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் எதிரே விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சின் முன் பக்கத்தில் சிக்கிக் கொண்ட கார் சிறிது தூரம் இழுத்துச் செல்லபட்டதில், காரின் ஒரு பக்க மேற்கூரை முழுவதும் நசுங்கி சேதமானது.
இந்த சம்பவத்தில் சக்திவேலின் மனைவி கனகவல்லி, தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் காரில் சென்ற கோவிந்தராஜ், கலைவாணன், பவுனு அம்மாள் ஆகிய 3 பேரும் படுகாயத்துடன் துடிதுடித்தனர். அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலைவாணனும், பவுனு அம்மாளும் பரிதாபமாக இறந்தனர். கோவிந்தராஜனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகவல்லியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் மாமியார், மருமகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






