

நீலகிரி மாவட்டத்தில் நூற்றாண்டு கடந்தும் இன்றும் பொலிவு மாறாமல் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் இந்த மலை ரெயிலில் பயணம் செய்ய முன்கூட்டியே முன்பதிவு செய்து காத்திருந்து பயணம் செய்கின்றனர்.
இந்த நிலையில், ஜெர்மன் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் 3 நாட்களாக மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கும் பயணம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக குன்னூரில் இருந்து ஊட்டிக்கு பழமை மாறாமல் உள்ள நீராவி இன்ஜின் கொண்ட மலை ரெயிலில் பயணம் மேற்கொண்டனர்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இன்ஜின் ரெயில் பெட்டியுடன் இணைத்து பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த மலை ரெயிலை ஆங்காங்கே நிறுத்தி இதில் வந்த ஜெர்மன் நாட்டு பயணிகள் நூற்றாண்டும் கடந்தும் கம்பீரமாக உள்ள பாலங்கள், குகைகள், இயற்கை காட்சிகளை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்தனர்.
இந்தக் குழுவினர் உலகில் உள்ள அனைத்து ரெயில்களிலும் பயணம் மேற்கொண்டு வருவதாகவும், இந்த மலை ரெயிலில் பயணம் மேற்கொண்டது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.