

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை இலவசமாக பார்வையிடும் வகையில் நுழைவுச் சீட்டுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. மேலும், உயிரியல் பூங்காவின் இணையதளமான tickets.aazp.in மூலம் முன்பதிவு செய்யப்பட்ட இலவச நுழைவுச் சீட்டுகளை பெற்றுள்ள பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பொதுமக்களிடமிருந்து கிடைத்துள்ள மிகுந்த வரவேற்பின் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தேதிகளுக்கான அனைத்து நுழைவு சீட்டுகளும் முழுமையான முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட இரண்டு நாட்களிலும் உயிரியல் பூங்கா நுழைவுச் சீட்டு கவுண்டர்களில் நேரடி (on-the-spot) டிக்கெட்டுகள் வழங்கப்படாது.
எதிர்பார்க்கப்படும் அதிகளவிலான பார்வையாளர்களின் வருகையை கருத்தில் கொண்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பார்வையாளர்கள் சிரமமின்றி நகர்வதற்கான போதிய இடவசதியை உறுதி செய்யவும், அத்தியாவசிய பார்வையாளர் வசதிகள் மற்றும் பிற சேவைகளை திறம்பட நிர்வகிக்கவும் நுழைவு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கைகள் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளின் நலனைப் பாதுகாப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஒவ்வொரு பார்வையாளருக்கும் வசதியான, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள உயிரியல் பூங்கா அனுபவத்தை வழங்குவதற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொதுமக்களின் கனிவான ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.