‘தொகுதி மறுவரையறை மசோதாவை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை தமிழ்நாடு மக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது’ - திருமாவளவன்

‘தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறினால் தென் மாநிலங்கள் முற்றிலுமாக அரசியல் செல்வாக்கை இழந்து விடும்’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
‘தொகுதி மறுவரையறை மசோதாவை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை தமிழ்நாடு மக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது’ - திருமாவளவன்
Published on

ஒன்றிய அரசு தொகுதி மறுவரையறை முயற்சியை கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுகிறோம்’ என்ற பெயரில் தொகுதி மறு சீரமைப்பு சட்ட மசோதாவைத் தந்திரமாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துகிறது.

மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதில் எவருக்கும் மறுப்பில்லை. 33% க்குப் பதிலாக 50% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு 2023ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றிவிட்டது. அதன்படி 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலேயே மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

ஆனால், “அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பைச் செய்து, தொகுதி மறு சீரமைப்பை முடித்த பின்பு தான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நடைமுறைக்கு வரும்” என ஒன்றிய பாஜக அரசு தீர்மானித்தது.

இப்போது திடீரென ‘மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கப் போகிறோம்’ என அறிவித்து, அதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை ஒன்றிய அரசு கூட்டியுள்ளது.

மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உண்மையிலேயே பாஜகவுக்கு அக்கறை இருந்தால் தற்போது உள்ள நாடாளுமன்ற எண்ணிக்கைக்குள்ளேயும், சட்டமன்றங்களின் எண்ணிக்கைக்குள்ளேயும் அதை வழங்கலாம்.

ஆனால், அதற்காக சட்டத்திருத்த மசோதா கொண்டு வருகிறோம் என்று கூறிக்கொண்டு, இந்தியா முழுவதும் தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கும்; நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கும்; இதற்கென தொகுதி மறு சீரமைப்பு ஆணையம் ஒன்றை அமைப்பதற்கும் சட்ட மசோதாக்களை பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின் போது அடுத்ததாக 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் எனக் கூறப்பட்டது.

2021 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தால் 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2031 ஆம் ஆண்டில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் பிறகு தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டும்.

ஆனால் இந்த சட்டத்துக்கு மாறாக இப்போதே தொகுதி மறுசீரமைப்புச் செய்வதற்கு பாஜக அரசு முயற்சிக்கிறது. அதற்கு அடிப்படையாக 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வைத்துக் கொள்ளலாம் என அது முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

நாடாளுமன்றத் தொகுதிகளை 850 ஆக உயர்த்தும்போது ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை உயரும். அது எதன் அடிப்படையில் உயர்த்தப்படும் என்பதை இதுவரை ஒன்றிய அரசு தெளிவாகக் கூறவில்லை.

பாஜக அமைச்சர்கள் சொல்வதையும், தற்போது வெளியாகியுள்ள சட்ட மசோதாக்களையும் பார்க்கும்போது 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் எனத் தெரிகிறது.

அவ்வாறு செய்தால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களும்; ஒடிசா, மேற்குவங்கம் முதலான மாநிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்படும். இந்த மாநிலங்களில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது இருக்கும் விகிதத்தை விடக் குறையும். ஆனால் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் முதலான இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அதன் பின்னர் உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் ஒரு கட்சி அதிக எண்ணிக்கையில் இடங்களைக் கைப்பற்றினால் அது இந்தியாவையே ஆளக்கூடிய நிலை ஏற்படும். இதன் காரணமாக தென் மாநிலங்கள் முற்றிலுமாக அரசியல் செல்வாக்கை இழந்து விடும்.

இந்த ஆபத்தை கருதித்தான் தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பு மாநில அரசுகளோடு கலந்து ஆலோசிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் ஒன்றிய அரசை வலியுறுத்தி வந்தார்கள்.

தற்போதுள்ள விகிதத்திலேயே நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாநிலத்திலும் உயர்த்தப்பட வேண்டும் என்றும், அதற்கு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொள்ளக்கூடாது என்றும் கூறி வந்தனர்.

ஆனால் அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு இப்போது தொகுதி மறு சீரமைப்பைச் செய்வதற்கு பாஜக அரசு முடிவு எடுத்திருக்கிறது.

பாஜக அரசு தொகுதி மறு சீரமைப்பை மேற்கொண்டால் அதன் பின்னர் வடக்கு வாழும், தெற்கு தேயும் ஏற்கனவே வரி வருவாய்ப் பகிர்விலும், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வதிலும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.

இப்போது தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்து போனால் அதன் பின்னர் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு மதிப்பும் இல்லாமல் போய்விடும். எனவே இந்த கொடிய முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை தமிழ்நாட்டில் உள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

ஒன்றிய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து நாடு முழுவதும் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

அதை விடுதலைச் சிறுத்தைகள் வழிமொழிகிறது தொகுதி மறு சீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 16 4 2025 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் தமிழ்நாடு முழுவதும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் கட்சி அலுவலகத்திலும் தமது விடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com