

தமிழக அரசின் பதவிக்காலம் மே 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டத்தில் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இதற்கிடையே, கோவை தெற்கு, பர்கூர், பாலக்கோடு உள்ளிட்ட தொகுதிகளில் தி.மு.க.வினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு ரூ.8,000 கூப்பன் வழங்கி வருவதாக அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியது. அத்துடன் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுத்து, இதுவரை வழங்கப்பட்ட கூப்பன்களை பறிமுதல் செய்து நேர்மையாக தேர்தல் நடத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அளித்துள்ள விளக்கத்தில், தேர்தல் ஆணையம் வழங்கிய அந்தச் சான்றிதழ், மின்னணு ஊடகங்களில் விளம்பரங்களை ஒளிபரப்புவதற்காக வழங்கப்பட்டது எனவும், அச்சிடப்பட்ட பிரசுரங்களுக்கு பயன்படுத்துவதற்கு இது பொருந்தாது எனவும் பதிவிட்டுள்ளது.