

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் முழுமையான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (மார்ச் 24) மாலை வெளியிட்டார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் 297 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சிக்கு வந்தால் இவை, திமுகவை போல் அல்லாமல் இந்த அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார் இபிஎஸ்.
அதிமுகவின் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கியமான அறிவிப்புகளை காண்போம்.
ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் சிறப்புத்தொகை
குலவிளக்கு திட்டம் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.2000
மகளிரைப்போல ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம்
வீடு இல்லாதவர்களுக்கு அம்மா இல்லம் திட்டம் மூலம் வீடு கட்டித் தரப்படும்.
நூறுநாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
முதியோர், கைம்மைப் பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1200-ல் இருந்து ரூ.2000ஆக உயர்த்தி வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு இல்லாமல், கடன் தவணையை செலுத்த முடியாமல் உள்ளோருக்கான வங்கிகளில் பெற்ற கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வருடத்திற்கு 3 இலவச சிலிண்டர்கள்
ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழப்போர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம்தோறும் ரூ.2000
ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000
நடைபாதைகளில் கடை வைத்திருக்கும் சிறுவியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
தீபாவளிக்கு விலையில்லா சேலை, வேட்டி வழங்கப்படும்.
இல்லத்தரசிகளுக்கு இலவச ஃபிரிட்ஜ் வழங்கப்படும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியோடு, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம், விவசாயிகள் பெற்றுள்ள வேளாண்மை பயிர் கடன் தள்ளுபடி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கடலில் மீனவர்கள் உயிரிழந்தால் ரூ.25 லட்சம் இழப்பீடு
65 வயதுக்கு மேற்பட்ட மீனவர்களுக்கு, மீனவர் நல வாரியம் மூலம் மாதம் 2,500 ரூபாய் ஒய்வூதியம் வழங்கப்படும்.
பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்
மத்திய அரசு போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் தமிழில் நடத்த வலியுறுத்தப்படும்.
சென்னையில் செயல்பட்டு வரும் காவலன் செயலி, மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.