ஊழல் குறித்து கவர்னருக்கு கடிதம் எழுத அமைச்சர் ரகுபதிக்கு தகுதி இல்லை- எடப்பாடி பழனிசாமி

டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.2024 மக்களவை தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை அ.தி.மு.க. தொடங்கி விட்டது.
ஊழல் குறித்து கவர்னருக்கு கடிதம் எழுத அமைச்சர் ரகுபதிக்கு தகுதி இல்லை- எடப்பாடி பழனிசாமி
Published on

தூத்துக்குடி:

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் சென்னை செல்வதற்காக தூத்துக்குடி வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளது வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் காவலர் நலவாழ்வு திட்டம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மன அழுத்தம் உள்ள காவலர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனால் அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டனர். ஆனால் அந்த காவலர் நலவாழ்வு திட்டத்தை தற்போதைய தி.மு.க. அரசு நிறுத்தி விட்டதாக தெரிகிறது.

அந்த திட்டம் இருந்திருந்தால் தற்போதைய டி.ஐ.ஜி. தற்கொலை ஏற்பட்டிருக்காது. டி.ஐ.ஜி. தற்கொலை பற்றி அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவை. காவலர் குடும்பத்திலும் மன அழுத்தம் இல்லை. அவருக்கும் மன அழுத்தம் இல்லை என தெரிகிறது. எனவே அவரது இறப்பு தற்கொலையா என விசாரிக்க வேண்டும்.

தற்போதைய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஊழல் பற்றி பேச தகுதி இல்லை. அவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஊழல் வழக்கு உள்ள அவர் ஊழல் தடுப்பு பிரிவை கண்காணித்து வருகிறார். இது எப்படி சரியாக இருக்கும்.

தி.மு.க.வின் தற்போதைய அமைச்சர்கள் 15-க்கும் மேற்பட்டவர்கள் மீது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த வழக்குகளில் தற்போதைய தி.மு.க. வக்கீல்கள் சரியான வாதங்களை எடுத்து வைக்காததால் அவர்கள் விடுதலையாகி வருகிறார்கள்.

தி.மு.க. அமைச்சர்கள் பாதி பேர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு பயந்து போய் உள்ளனர். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com