

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பெரியகருப்பன் 83 ஆயிரத்து 364 வாக்குகளையும், த.வெ.க., வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83 ஆயிரத்து 365 வாக்குகளையும் பெற்றிருந்தனர். த.வெ.க., வேட்பாளர் சீனிவாச சேதுபதி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் அவசர வழக்கு தொடர்ந்தார். அதில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்ட தொகுதிக்கு அனுப்பப்பட்டுவிட்டது. அந்த வாக்கை மீட்டு, என்னுடைய தொகுதியின் கணக்கில் சேர்க்க வேண்டும். அதுவரை சீனிவாச சேதுபதி, சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி, என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விடுமுறை நாளான நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது, பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தஹி, சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தொகுதி தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்ட திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அங்கு அந்த வாக்கை, அந்த தொகுதி தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார். அந்த வாக்கை சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பியிருக்க வேண்டும். செல்லத்தக்க அந்த வாக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தால் இரு வேட்பாளர்களும் சமமான வாக்குகளை பெற்றிருப்பர். குலுக்கல் மூலம் வெற்றி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்று வாதிட்டார்.
உடனே நீதிபதிகள், இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன நடைமுறை பின்பற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் ஏதேனும் விதிகள் வகுத்துள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மூத்த வக்கீல், இதுசம்பந்தமாக எந்த நடைமுறையும் இல்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு பல புகார்கள் அளித்தும் எந்த பதிலும் இல்லை. தவறான முகவரிக்கு செல்லும் கடிதம் கண்டு பிடிக்கும்போது, சரியான முகவரிக்குதானே அனுப்பி வைக்க வேண்டும். அது போல இந்த வாக்கை சரியான தொகுதிக்கு அனுப்ப உத்தரவிடவேண்டும் என்றார்.
த.வெ.க., வேட்பாளர் சீனிவாச சேதுபதி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, இந்த விவகாரம் தொடர்பாக பெரியகருப்பன் தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும். சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை கோரி இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது என்பதால், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்ககூடாது. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டால், அவரை கடமையாற்ற அனுமதிக்க வேண்டும். சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்க முடியாது. தடை விதித்தால், மக்கள் உரிமை பாதிக்கப்படும் என்றார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் கே.தருண், இந்த விவகாரத்தில் தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும். தபால் வாக்குகள் இந்திய தபால் துறை மூலம் அனுப்பப்படுவதில்லை. தபால் வாக்குகளை பெற தேர்தல் ஆணையம், துணை தாசில்தாரர் அந்தஸ்து அதிகாரியை நியமிக்கும். அந்த அதிகாரி தபால் வாக்குகளை பெற்று, சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார்.
அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இதில் அமர்த்தப்படுவதால் எந்த தவறும் நடக்காது. தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாற்றி அனுப்பி விட்டால், என்ன செய்ய வேண்டும்? என சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. தேர்தல் வழக்கு தாக்கல் செய்யும் வரை தேர்தல் தொடர்பான ஆவணங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்றார்.
அதற்கு நீதிபதிகள், தபால் வாக்குகள் வேறு தொகுதிக்கு அனுப்பியது குறித்து திமுக வேட்பாளரின் புகாருக்கு பதிலளிக்காதது ஏன்? ஒரு வாக்காக இருந்தாலும் பதிலளிக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. இதற்கான காரணங்களை விரிவாக விளக்கி இன்று தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரிப்போம் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பத்தூர் பெயர் கொண்ட வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்ட ஒரு தபால் வாக்குச்சீட்டால், தேர்தல் முடிவுகள் மாறியுள்ளதாகவும், தபால் வாக்குச்சீட்டு தொகுதி மாறி அனுப்பினால் என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது தெரியாத நிலை உள்ளதாகவும் பெரியகருப்பன் தரப்பில் வாதிட்டப்பட்டது.
இறுதியில் இருதரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.