

கோவை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டூர் அருகே ராம் நகர் விவேகானந்தா ரோடு வி.என்.தோட்டம் பகுதியில், தி.மு.க.வினர் சிலர் வீடு-வீடாக சென்று ரூ.8 ஆயிரம் மாதிரி கூப்பன்களை விநியோகம் செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ரவிராஜ் என்பவர் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து மாதிரி கூப்பன்களை வினியோகம் செய்ததாக தி.மு.க. வார்டு செயலாளர் சேதுராமன் மற்றும் ராமமூர்த்தி, மெஜஸ்டிக் சின்னராஜ், கண்ணம்மாள் மற்றும் 2 பெண்கள் மீது காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அதேபோன்று காந்திபுரம் 7-வது தெருவில் உள்ள ஸ்டுடியோ அருகே தி.மு.க.வினர் நின்று ரூ.8 ஆயிரம் மாதிரி கூப்பனை வினியோகம் செய்ததாக கூறப்பட்டது. இதனை பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வினர் தட்டிக்கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதுதொடர்பான புகாரின் பேரில் தேர்தல் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ஸ்டுடியோ மற்றும் அருகில் உள்ள பிரியாணி கடையில் சோதனை நடத்தினர். அங்கிருந்த 170 மாதிரி கூப்பன் மற்றும் வாக்காளர் விவரம் அடங்கிய பட்டியலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்த ஸ்டுடியோ உரிமையாளரான வெங்கடேஷ் என்பவர் மீது ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.