

திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.
இங்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் திருவிழா நாட்கள் மட்டுமல்லாமல் விடுமுறை நாட்களில் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
தற்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஞாயிறு விடுமுறை நாளான இன்று அதிகாலையில் இருந்தே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி பொது மற்றும் ரூ.100 கட்டண வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று காலை ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்ததால் கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.