

ஆளுநர் மாளிகைக்கு பொதுமக்களை அழைத்து போட்டி அரசாங்கம் நடத்த ஆளுநர் முயற்சி செய்கிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆளுநர் மாளிகைக்கு வந்து புகாரளிக்கலாம் என்ற ஆளுநர் அர்லேக்கரின் பேச்சிற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆளுநர் மாளிகையை அணுகலாம், கோரிக்கைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்' என நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பேசியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி அரசாங்கம் நடத்தும் பகிரங்க அறிவிப்பாகும்.
ஆளுநரின் செயல் மாநில அரசின் நிர்வாகத்தில் நேரடியாக தலையிடும் அதிகார அத்துமீறலாகும்;
ஆளுநரின் அத்துமீறலை தடுத்து நிறுத்த, குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக ஆளுநர் அர்லேகர் நேற்று உரையாற்றினார்.
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசுகையில், "பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம். நமது சமுதாயத்தில் சமூக நல்லிணக்கம் இல்லாமல் போனதுதான் பிகப்பெரிய பிரச்சனை, ஆதலால் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க த.வெ.க. அரசுடன் இணைந்து செயல்படுவேன்.
தேவைப்பட்டால் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு நானே நேரடியாக முதலிமைச்சரிடம் கூறுவேன். ஆளுநரிடமும் அரசிடமும் எதிர்பார்ப்பு இருந்தால் மக்கள் தங்களது தேவைகளை உடனடியாக தெரிவிக்கலாம். நாங்கள் ஒன்றிணைந்து மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்போம்" என்று தெரிவித்தார்.