

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், தமிழகத்தில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இன்றி த.வெ.க. உள்ளது.
தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில், த.வெ.க. அலுவலகத்திற்கு வந்த ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கேட்டையன் ஆகியோருடன் விஜய் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து நீலாங்கரை இல்லத்திற்கு விஜய் புறப்பட்டு சென்றார்.
கடந்த இரண்டு நாட்களாக த.வெ.க. தலைவர் விஜய்க்கு, முதலமைச்சருக்கு வழங்கப்படும் கான்வாய் வாகனங்களுடனான பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. வாக்கு எண்ணிக்கை நடந்த தினமே அவருக்கு கான்வாய் வாகனங்களுடன் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து விஜய் வீட்டுக்கு புறப்படுவதற்கு முன்பே கான்வாய் வாகனங்கள் எடுத்து செல்லப்பட்டன. அவை தலைமை செயலகம் நோக்கி புறப்பட்டு சென்றன. 4 கான்வாய் வாகனங்களும் புறப்பட்ட நிலையில் காவல் துறையினர் மட்டுமே விஜய்யுடன் உள்ளனர்.
த.வெ.க. தலைவர் விஜய்க்கு, முதலமைச்சருக்கு அளிக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு எனப்படும் கான்வாய் வாகனங்கள் வாபஸ் பெறப்பட்டு உள்ளன. இதனால், கான்வாய் வாகனங்கள் எதுவுமின்றி விஜய் நீலாங்கரை வீட்டுக்கு புறப்பட்டார். இதில், தானாக முன்வந்து கான்வாய் வாகனங்களை விஜய் திருப்பி அனுப்பினார் என்றும் கூறப்படுகிறது.