

கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்தனர்.
வெயில் காரணமாக மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகள் அனைத்திலும் நீர் மட்டம் குறைந்து விட்டது. சில இடங்களில் குளங்கள் முற்றிலும் வறண்டு போய் விட்டன.
தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது.
மழை இல்லாததாலும், குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுக்கப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் இந்த மாத தொடக்கத்தில் 12 அடிக்கும் குறைவாகவே இருந்தது.
அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 50 அடியாகும். கடந்த 3-ந் தேதி அணையின் நீர்மட்டம் 11.91 அடியாக இருந்தது. ஆனால் வெயிலின் தாக்கத்தால் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக வெயில் விட்டு, விட்டு பெய்கிறது.
இதனால் கடந்த ஒரு வாரமாக அணையின் நீர்மட்டம் 10 முதல் 12 அடியாக இருந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 10.79 அடியாக இருக்கிறது. குடிநீர் தேவைக்காக 4.2 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. தண்ணீர் இருப்பு சரிந்து வரும் நிலையில் பருவமழையையே நம்பி இருக்க வேண்டி உள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூனில் தொடங்கும். அதுவரை பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பில்லூர் அணை கைகொடுத்தாலும் குடிநீர் தேவை தவிர இதர தேவைகளுக்கு தண்ணீர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் பி.ஏ.பி பாசன திட்டத்தின் கீழ் உள்ள சோலையாறு, காடம்பாறை, மேல் ஆழியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அனைத்து அனைகளும் நிரம்பி காணப்பட்டது.
தற்போது கடந்த 5 மாதங்களாக வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்து கோடைவெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள சோலையார், ஆழியார் அணை உள்பட்ட அனைத்து அணைகளின் நீர் மட்டமும் வேகமாக சரிந்து வருகிறது.
வால்பாறையில் உள்ள 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் 11.96 அடியாக உள்ளது. அணைகளின் நீர்மட்டம் சரிந்துள்ளதால், பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.