

இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ஏராளமானோர் மெரினா நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலையில் இருந்து திரளானவர்கள் மெரினாவில் குவிந்துள்ள நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை காண ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை காண புறநகர் ரெயில்களில் வருவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக புறநகர் ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதுவிர சென்னை மெட்ரோ ரெயில்களிலும் ஏராளமானோர் விமான சாகச நிகழ்ச்சியை காண செல்கின்றனர். இதன் காரணமாக மெட்ரோ ரெயில்கள் வழக்கத்திற்கு மாறாக கால தாமதமாக இயங்குகின்றன.
முன்னதாக, வழக்கத்தை விட கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்து இருந்தது. இதேபோல் கூடுதல் சிற்றுந்துகளும் இயக்கப்படுகின்றன. விமானப்படை சாகச நிகழ்ச்சியை ஓட்டி 6 ஆயிரத்து 500 காவல் துறையினர், 1500 ஊர்காவல் படையினர் உள்பட மொத்தம் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.