இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த முயற்சி - அனுராக் தாக்கூர்

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை படைத்ததற்கு கேலோ விளையாட்டு முக்கிய காரணம்.பெரிய அளவிலான விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு மிக சிறப்பாக நடத்தி வருகிறது.
இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த முயற்சி - அனுராக் தாக்கூர்
Published on

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி துவக்க விழாவில் கலந்து கொண்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மேடையில் உரையாற்றினார். அவர் கூறியதாவது, "இந்த தொடக்க விழாவில் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் பிரதமரின் முக்கிய திட்டமாகும். தற்போது சர்வதேச அளவில் இந்தியா பதக்கங்களை பெற்று முன்னிலை பெற்று வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை படைத்ததற்கு கேலோ விளையாட்டு முக்கிய காரணம் ஆகும். இப்போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்று இந்தியா சாதனை படைத்து வருகிறது.

2030, 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்காக பிரதமர் மோடி பல முயற்சிகளை செய்து வருகிறார். விஸ்வநாதன் ஆன்ந்த், பிரக்ஞானந்தா ஆகிய செஸ் ஜாம்பவான்கள் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றனர். பெரிய விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு எப்போதெல்லாம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் மிக சிறப்பாக தமிழ்நாடு அந்த போட்டிகளை நடத்தி இருக்கின்றது. ஹாக்கி விளையாட்டு போட்டி, ஸ்குவாஸ் கோப்பைக்கான விளையாட்டு போட்டி, செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகிய போட்டிகளை மிகவும் திறமையாக நடத்தி இருக்கிறது.

கேலோ இந்தியா என்பது பதக்கங்களை வெற்றி பெறுவதற்காக நடத்தப்படும் விளையாட்டு அல்ல, உங்களின் பெருமையை, திறமையை மேலும் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பை தருகின்ற ஒரு விளையாட்டு போட்டி" எனக் கூறினார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் கேலோ இந்தியாவின் கீழ் செலவழிக்கப்பட்ட பட்ஜெட்டை மூன்று மடங்கு உயர்த்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com