

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று இரண்டாவது நாளாக கூடியது. அவையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இறுதியில், ‘மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்’ எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த வெறுப்பு பேச்சே அவர் துணை முதலமைச்சரிலிருந்து எதிர்க்கட்சித் தலைவராக பதவி இறங்க காரணம் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,
“உங்கள் முதல் சட்டமன்ற உரையிலேயே கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையான சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என நீங்கள் பேசியிருப்பது, அரசியல் ரீதியாக நீங்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்பதைத் தான் காட்டுகிறது. இந்துக்களின் மீது தொடர்ந்து நீங்கள் கல்லெறிவது கடும் கண்டனத்திற்குரியது.
துணை முதலமைச்சராக இருந்த நீங்கள், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக பதவி இறக்கம் செய்யப்பட்டதற்கு "சனாதனத்தை ஒழிப்பேன்" என்று நீங்கள் ஒருமுறை பொதுவெளியில் பேசி, இந்துக்களின் நீங்கா வெறுப்பை சம்பாதித்துக் கொண்டதே காரணம்.
எனவே, நீங்கள் அரசியலில் மென்மேலும் வளர வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது உங்களுக்குள்ள வெறுப்புணர்வை வெட்டி எறிந்துவிட்டு, உண்மையான மதநல்லிணக்கத்தைப் போற்றுவது அவசியம். இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் அவரவர் மத அடையாளங்களும் நம்பிக்கைகளும் அதிமுக்கியம் என்பதை நீங்கள் இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதை விட்டுவிட்டு இந்துக்களின் நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தி, "மத" யானையின் மீது அரசியல் சவாரி செய்ய முயன்றால் மீள முடியா பாழுங்குழியில் வீழ்வீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும், அனைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைத்திருக்கும் முதலமைச்சர் விஜய், சட்டமன்றத்தில் பகிரப்பட்ட இந்த வெறுப்புப் பிரச்சாரத்திற்கு என்ன எதிர்வினையாற்றப் போகிறார் என்பதைத் தான் தமிழ்நாடு தற்போது ஆவலாக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.