அமோனியா கசிவு 9 பேர் பலி: பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் குமார் நேரில் ஆறுதல்

அமோனியா கசிவு விவகாரம் குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது.
TN Minister Kumar
Published on

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைபேர் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் 74 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் சாந்தாராம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வாயுக் கசிவு சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை ஆணை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், அமோனியா கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அமைச்சர் குமார் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து அமைச்சர் குமார் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

திருவள்ளூரில் அம்மோனியா வாயுக் கசிவால் துயரமான சம்பவம் நடந்துள்ளது. 60 பெண்கள், 4 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களில் 23 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறால் பதப்படுத்தும் ஆலையில் வாயு கசிவால் தொழிலாளர்கள் பலியான செய்தியறிந்து முதல்வர் விஜய் மிகவும் வேதனையடைந்தார். சம்பவம் தொடர்பாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை முதல்வருக்கு தகவல் அளித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com