சேலம் இரும்பாலை ரோட்டில் வியாபாரியிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி- கடத்தல் கும்பலை சேர்ந்த மேலும் 6 பேர் கைது

கைது செய்யப்பட்ட 6 பேரிடமிருந்து 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
கைதான 6 பேர் படத்தில் காணலாம்.
கைதான 6 பேர் படத்தில் காணலாம்.
Published on

சேலம்:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 37). இவர் கண்ணு வலி கிழங்கு என சொல்லப்படும் செங்காந்தாள் விதை வியாபாரம் செய்து வருகிறார்.

செங்காந்தாள் விதை கொள்முதல் செய்வதற்காக நண்பர்கள் அவினாசியை சேர்ந்த குமார், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த வாஞ்சியப்பன் (39) ஆகியோருடன் 50 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு காரில் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி காலை 4.30 மணிக்கு சேலம் இரும்பாலை அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது மற்றொரு காரில் வந்த மர்மகும்பல் போலீஸ் என கூறி வெங்கடேஷ், அவருடன் வந்த குமார், வாஞ்சியப்பன் ஆகியோரை பணத்துடன் காரில் கடத்தியது. பின்னர் தாரமங்கலம் அருகே மாரமங்கலத்துப்பட்டி பகுதியில் இறக்கி விட்டு விட்டு கடத்தல் கும்பல் தப்பி சென்றது.

இது குறித்து வெங்கடேஷ் இரும்பாலை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து இந்த கடத்தலில் தொடர்புடைய 6 பேரை செப்டம்பர் மாதம் இறுதியில் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை பிடிக்க துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை விசாரித்து வந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள முத்தியால் பள்ளியை சேர்ந்த நடராஜன் (53), அவரது மனைவி சுஜாதா (45) ஆகியோரை நேற்று கைது செய்தனர் . தொடர்ந்து அவர்கள் கொடுத்த தகவல் படி சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூசாரி வட்டம் சீனிவாசன் (44) , கீரப்பாப்பம்பாடி மகாலிங்கம் (39), மாமாங்கம் ஜெகன்மோகன் (44), தர்மபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகர் கோபி (38) ஆகியோரை அவரவர் வீட்டில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரிடமிருந்து 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 6 பேரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com