

தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையில் வருவாயைப் பெருக்குவதற்கும், பொதுமக்களின் பயண வசதிகளை மேம்படுத்துவதற்கும் பல்வேறு அதிரடி செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு, ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சாதாரண ஏழை மற்றும் நடுத்தர மக்களும் ஏ.சி. பேருந்துகளில் பயணம் செய்யும் வகையில் புதிய தொலைநோக்குத் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பேருந்துகளை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ டெண்டர் விரைவில் கோரப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மின்சார பஸ்களில் பல்வேறு வசதிகள் இடம்பெறும் வகையில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒருமுறை பேட்டரி சார்ஜ் ஏற்றினால் சுமார் 300 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும் வசதி கொண்ட பஸ்களை தமிழக போக்குவரத்து துறை வாங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் முற்றிலும் பேட்டரி மூலம் இயங்குவதால், காற்று மாசுபாடு மற்றும் சத்தமில்லாத சொகுசுப் பயணம் பொதுமக்களுக்குக் கிடைக்கும்.